கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்… அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்…

in 2020 ஆகஸ்ட்

கடமையான தொழுகையில் ஏற்படும் குறையும்…

அதை நிறைவாக்கும் உபரியான தொழுகையும்…

M.H. ஹனிபா

ஒருவர் தொழுது முடித்து (வீடு) திரும்புகிறார். அவருக்குத் தொழுகையின் நன்மையில் பத்தில் ஒன்றோ, ஒன்பதில் ஒன்றோ, எட்டில் ஒன்றோ, ஏழில் ஒன்றோ, ஆறில் ஒன்றோ, ஐந்தில் ஒன்றோ, மூன்றில் ஒன்றோ, இரண்டில் ஒன்றோதான் கிடைக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.
(அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர்(ரழி), நூல்கள்: அபூதாவூத் 796, அஹ்மத்)

ஆக, ஓர் இறையடியாரின் முழுத் தொழுகையில் கூடுதலாக ஒன்றில் பாதி என்ற அளவும், குறைந்தபட்சம் ஒன்றுக்கு பத்தில் ஒரு பங்கு என்ற அளவிலும் எனக் கணக்கிட்டு நன்மைகள் வழங்கப்படுகிறது. தொழுகையில் உள்ளச்சத்தையும் மன ஓர்மையையும் பொறுத்து நன்மைகள் கூடும், குறையும்.

தொழுகையில் அறவே கவனமில்லாமல் இருந்தால் நன்மை கிடைக்காமலும் போகலாம், அந்தத் தொழுகை முகத்திலேயே வீசி எறியப்படும்.

எனவே, தொழுகையில் நிற்கும்போது இம்மை வாழ்க்கை தொடர்பான மனவோட்டத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும் இயன்றவரை இறைவன் முன் நிற்கிறோம் என்ற இறையச்சத்தை பேணவேண்டும்.

உபரியானத் தொழுகைகள் :

கடமையான தொழுகைக்கு முன்னரும் பின்னரும் சில உபரியானத் தொழுகை களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இந்த உபரித் தொழுகைகளை “சுன்னத்” மற்றும் விருப்பத் தொழுகை என்று கூறுவோம்.

சுன்னத் தொழுகை என்று அலட்சியப்படுத்தாமல் உபரியானத் தொழுகைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால், கடமையான தொழுகைக்கு ஈடான நன்மைகள், அல்லாஹ் நாடினால் சுன்னத்தான தொழுகைக்கும் கிடைக்கும். சுன்னத் தொழுகை கடமையான தொழுகைக்குப் பகரமாகச் சமன் செய்யப்படும் என்பதை அறியத்தரும் நபிமொழி!

நான் மதீனாவுக்குச் சென்றபோது, “இறைவா! எனக்கு நல்ல தோழரை எளிதில் கிடைக்கச் செய்வாயாக!” என்று பிரார்த்தனை செய்தேன். அபூஹுரைரா(ரழி) அவர்களின் நட்பைப் பெற்றேன். நல்ல நட்பை வழங்குமாறு அல்லாஹ்விடம் நான் கேட்டதை அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியைக் கூறுங்கள். அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கலாம் என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு, “மறுமை நாளில் ஒரு மனிதனின் செயல்களில் தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சரியாக இருந்தால் அவன் வெற்றியும் ஈடேற்றமும் அடைவான். அது சீர்கெட்டிருந்தால் அவன் இழப்பும் துன்பமும் அடைவான். “அவனது கடமைகளில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் “எனது அடியானிடம் ஏதேனும் உபரியானத் தொழுகைகள் உண்டா எனப் பாருங்கள்” என்று அல்லாஹ் கூறுவான். கடமைகளில் ஏற்பட்ட குறைவு, அவற்றின் மூலம் நிறைவு செய்யப்படும். ஏனைய எல்லா வணக்கங்களும் இவ்வாறே அமையும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹுரைஸ்(ரஹ்) நூல்கள்: திர்மிதீ:378, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத்)

மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற கடமையான அமல்களில் குறைவு ஏற்பட்டால் அவை உபரியான அமல்களைக் கொண்டு நிறைவு செய்யப்படும். சுன்னத்தான அமல்களால் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.

கடமையான   தொழுகைக்கு முன், பின் சுன்னத்தான  தொழுகைகள் :

“ஒரு நாளின் இரவிலும், பகலிலும் பன் னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுபவ ருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப் பப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் செவியுற்றிருக்கிறேன். (அறி விப்பாளர் : உம்முஹபீபா(ரழி) நூல்கள்: முஸ் லிம் 1198, 1199, நஸயீ, அபூதாவூத், இப்னு மாஜா, அஹ்மத், தாரிமீ)

லுஹ்ருக்கு முன் நான்கு ரக்அத்கள், லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள் ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரெண்டு ரக்அத்களை யார் தொடர்ந்து தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஓர் இல்லத்தைக் கட்டுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : உம்மு ஹபீபா(ரழி), நூல்கள்: திர்மிதி: 379, இப்னுமாஜா)

அன்னை உம்மு ஹபீபா(ரழி) அவர்களின் அறிவிக்கும் இதே ஹதீஃத் நஸயீ நூல் பதிவில், “அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்” என்று கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்” என்பது இடம்பெறவில்லை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) எனது வீட்டில் லுஹ்ரு(டைய ஃபர்ளு)த் தொழுவிப் பார்கள். பிறகு வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு மஃக்ரிபு(ஃபர்ளு)த் தொழுவித்து விட்டு (வீட்டுக்கு)வந்து இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுவார்கள். மக்களுக்கு இஷாத் தொழுவித்துவிட்டு எனது வீட்டுக்கு வந்து இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். இரவில் ஒன்பது ரக்அத்கள் (நஃபில்) தொழுவார்கள். அவற்றில் வித்ருத் தொழுகையும் அடங்கும். இரவில் நீண்ட நேரம் நின்றும் தொழுவார்கள். அமர்ந்தபடியும் தொழுவார்கள். நின்று ஓதித் தொழும் போது நிலையிலிருந்தே ருகூவும் ஸஜ்தாவும் செய்வார்கள். உட்கார்ந்து ஓதித் தொழும்போது உட்கார்ந்தபடியே ருகூவும், ஸஜ்தாவும் செய்வார்கள். ஃபஜ்ரு நேரம் வந்து விட்டால் (ஃபஜ்ரின் முன் சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), நூல்: முஸ்லிம்: 1201)

உட்கார்ந்த நிலையில் தொழும்போது நபி (ஸல்) ருகூவு செய்த சிறந்த முறை:

ஆயிஷா அறிவித்தார் :

நபி(ஸல்) அவர்கள் தங்களின் முதுமையை அடையும் வரை இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. முதுமையான காலத்தில் அவர்கள் உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும்போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வசனங்கள் ஓதிவிட்டுப் பிறகு ருகூவுச் செய்வார்கள்.
புகாரி:1118, அத்தியாயம்: 18, கஸ்ருத் தொழுகை.

நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் லுஹ்ரு(டைய ஃபர்ளு)க்கு முன் இரண்டு ரக்அத்களும் லுஹ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்களும், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் ஜுமுஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களும் (சுன்னத்) தொழு தேன். மஃக்ரிப், இஷா, ஜுமுஆ (ஆகியவற்றின் சுன்னத்) தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் அவர்களது இல்லத்திலேயே தொழுதேன். (அறிவிப்பாளர்: அப்துல் லாஹ் இப்னு உமர்(ரழி), நூல்கள்: புகாரி: 937, முஸ்லிம் : 1200)

மேற்கண்ட இப்னு உமர்(ரழி) அவர்களின் அறிவிப்பில் லுஹ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் எனவும், ஜும்ஆத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் எனவும் பதிவாகியுள்ளது. “ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள்” என்பது இடம் பெறவில்லை.

கடமையான தொழுகைக்கு முன் பின் சுன்னத்தான தொழுகைகள் முறையே:

பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் :

லுஹருக்கு முன் குறைந்தது இரண்டு ரக்அத்கள், கூடுதலாக நான்கு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

        v    அஸருக்கு முன் இரண்டு ரக்அத்கள்.

        v    மஃக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

        v    இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

        v    ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள். தொழுதுகொள்ளலாம்.

இன்னும், ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுது கொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவற்றையும் தொழுது கொள்ளலாம்.

“ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்கு மிடையில் ஒரு தொழுகை உண்டு” நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு “விரும்பியவர்கள் தொழலாம்” என்று மூன்றாம் முறை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரழி) நூல்கள்: புகாரி:627, முஸ்லிம்: 1522, திர்மிதீ: நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமீ)

நபி(ஸல்) அவர்கள், “மஃக்ரிப்’ தொழுகைக்கு முன்பாக (இரண்டு ரக்அத்கள்) தொழுங்கள் என்றார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள்வார்கள் என்று அஞ்சி, “இது விரும்புவோருக்குத்தான்’ என்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரழி), நூல்கள்: புகாரி: 7368, அபூதாவூத், அஹ்மத்)

நாங்கள் மதீனாவில் இருந்தபோது, முஅத்தின் மஃக்ரிபுத் தொழுகைக்காக பாங்குச் சொல்லிவிட்டால் மக்கள் (நபித்தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர். (அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்: முஸ்லிம்:1521)

மேலும், பள்ளிவாசலில் நுழைந்து, அமர்வதற்கு முன் பள்ளிக் காணிக்கையாக இரண்டு ரக்அத்கள் தொழும்படி நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். “நபி (ஸல்) அவர்கள் வெளியூர் பயணத்திலிருந்து திரும்பினால் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்ததும் அமர்வதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகத்தாதா(ரழி), நூல்கள்: புகாரி: 1163, முஸ்லிம்: 1166)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மக்களிடையே அமர்ந்திருந்த (ஒரு) போது நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். எனவே, நானும் (தொழாமல் அந்த அவையில்) அமர்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) “நீர் அமர்வதற்குமுன் ஏன் இரண்டு ரக்அத்கள் தொழவில்லை?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்களும் அமர்ந்திருந்தீர்கள், மக்களும் அமர்ந்திருந்தார்கள் (எனவே தான் நானும் அமர்ந்துவிட்டேன்) என்று பதிலளித்தேன். அதற்கு “உங்களில் ஒருவர் பள்ளி வாசலுக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகத்தாதா(ரழி), நூல்: முஸ்லிம்: 1167)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) எங்கேனும் பயணம் சென்றால் முற்பகல் நேரத்தில் தான் (ஊர்) திரும்புவது வழக்கம். அவ்வாறு திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு பிறகு பள்ளிவாசலில் அமர்வார்கள். (அறி விப்பாளர்: கஅப்பின் மாலிக்(ரழி), நூல்: முஸ்லிம் : 1171)

இவை தவிர தினமும் இரவுத் தொழுகை பதினோரு ரக்அத்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்களை வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் (அத்தஹியாத்துக்காக) உட்கார மாட்டார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), நூல்: முஸ்லிம்: 1217)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் உள்பட பதிமூன்று ரக்அத்கள்(இரவில்) தொழுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்: 1218)

இவை அனைத்தும் நன்மைகளை அள்ளித்தரும் சுன்னத்தான தொழுகைகள், இவற்றை முறையாக நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடுவோம்.
இன்ஷா அல்லாஹ்.        (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

 

Previous post:

Next post: